If you know Tamil, read this heartfelt experience of Tamizhselvan, one of the farm volunteers who spent a weekend at Vaksana Farms. You’ll get to better understand the difficulties of farmers and better appreciate the food you eat.
ரெட்டணை அருகே ஒரு அழகான விவசாய பண்ணை !
இந்தவாரம் திண்டிவனம் அருகே ரெட்டணை கிராமத்தில் உள்ள கிருபா சங்கர் பண்ணையில் களப்பணி ஆற்ற நாங்கள் (The Weekend Agriculturist team ) சென்று இருந்தோம் ! ரெட்டணை மிக அருமையான இயற்கை சுழல் மிகுந்த எழில்மிகு கிராமம் ! வெகுநாட்களுக்கு பிறகு கான்கிரீட் கட்டிடம் அதிகம் இல்லாத மிகுந்த குடிசை பகுதி உள்ள ஒரு இடத்தை பார்த்த அனுபவம் ! கிருபா என்பவர் தான் ரெட்டனையீல் இருந்து இருந்து கிலோமீட்டர் தொலைவில் தன்னுடைய விவசாய பண்ணையை (Vaksana Farms.) அமைத்துள்ளார் ! இரண்டு வருடத்திற்கு முன்னர் அது ஒரு கருவேல காடுகள் மிகுந்த தரிசு நிலமாக இருந்தது! இன்று அதனை வெற்றிகரமான விவசாய நிலமாக மாற்றியுள்ளார். அங்கேயே ஒரு பண்ணை வீடும் கட்டி உள்ளார்! சுற்றி இரண்டுகிலோமீட்டர் தொலைவில் அந்த ஒரு வீடு மட்டும் தான் உள்ளது. இந்த நவீன யுகத்தில் இப்படி ஒரு வீடா என ஆச்சரியமாக இருந்தது! பழமையும் ,இயற்கை சுழலும் ஒருசேர அமைந்த வீடு அது!அங்கே தங்கியே அனுபவம் ரம்மியமானது ! மேலும் பிளாஸ்டிக் உபயோகத்தை முடிந்தவரை தவிர்த்து வருகிறார் ! இந்த அருமையான வாய்ப்பினை எங்களுக்கு தந்த கிருபா சங்கர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம்!
அவருடன் நாங்கள் வேலை செய்யும் போது விவசாயம் சார்ந்த ஏராளமான பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் ! மேலும் ஒரு தன்னிறைவு மிக்க விவசாய கிராமத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டார் ! அதற்கு படித்தவர்கள் விவசாயம் சார்ந்த ,விவசாய்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணகூடிய கண்டுபிடிப்புகளை (இயற்கைக்கு மாறாக ,எந்த வகையில் பாதிப்பு இல்லாது ) கொண்டு வர வேண்டும்.! அவர் Social media சார்ந்து பணிபுரிவதால் social media மூலம் விவசாயத்தின் அவசியத்தை எப்படி மக்களிடம் எடுத்து செல்வது என்பதனையும் விளக்கினார்! அங்கே அறுவடை செய்த விவசாயி களுக்கு சம்பளமாக ,பண்டமாற்று முறைபடி பணத்திற்கு பதிலாக அவர்கள் அறுவடை செய்த பயீர்களே கொடுக்கபட்டது !
ரெட்டணை கிராமம் முழுவதும் சவுக்கு ,கரும்பு ,நெற்பயிர் இவையே அங்கு விவசாய தொழிலாக இருந்து வருகிறது ! பெரும்பகுதி மக்கள் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்வதையே விரும்புகின்றனர் ! அந்த ஊரில் மிகப்பெரிய , கூட்டம் மிகுந்த ,கடை என்றால் அது மதுபானக்கடைதான். அரசாங்கம் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கொடுத்து (அதையும் முழுமையாக கொடுப்பதில்லை ) அவர்களின் உழைப்பை முழுமையாக சுரண்டிவிட்டு ,மறுபடியும் தாங்கள் கொடுத்த பணத்தை மதுவின் மூலம் அவர்களிடம் இருந்து பிடிங்கி கொள்கின்றனர் ! ஆகா என்ன ஒரு அருமையான திட்டம் !
நாங்க அங்கே வேலை செய்யும் போதுதான் விவசாயிகளின் முழுமையான கஷ்டம் தெரிந்தது ! நாம் உண்ணும் உணவிற்கு பின்னால்,பல விவசாயிகளின் கடும் உழைப்பு உள்ளது உள்ளது என தெளிவாக புரிந்தது! ஆனால் அதற்கான முழுபலனும் அவர்களை போய் சேர்வதில்லை !
நாம் உண்ணும் உணவிற்கு பின்னால்,பல விவசாயிகளின் கடும் உழைப்பு உள்ளது ! இதில் கொடுமை என்னவென்றால் உலகிற்கே உணவளிக்கும் விவசாயிக்கு ,உண்பதற்கு உணவு இல்லாது நிலைமை ஏற்படுகிறது! உணவை உண்ணும் ஒவ்வொரு குடிமகனும் இரண்டுநாட்கள் கிராமம் சென்று விவசாயி களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் !அப்போதுதான் விவசாய்களின் கஷ்டத்தை முழுமையாக உணர முடியும் !
இன்று எல்லாரும் விவசாயத்தை விட்டு வெளியேறுவது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது ! விவசாயத்தில் வேலை செய்வதற்கு இங்கு யாருக்கும் விருப்பமில்லை !அதனை தடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் ! இல்லைஎன்றால் இதனால் ஏற்படபோகும் பாதிப்பை இன்னும் சில வருடங்களில் நாம் முழுமையாக அனுபவிக்க வேண்டிய வரும் ! இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை போலவும் ,நமக்கென வந்தது என நாம் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் எதோ ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ! அரசாங்கமும் இயற்கையையும் ,விவசாயத்தையும் காப்பாற்றுவதாக கூறி கொண்டு திட்டமிட்டு அதனை அழித்துவருகிறது!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பொருள் : உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
இதனை இளையோர்கள் ஆகிய நாம் புரிந்துகொண்டு இனியும் தாமதிக்காது இயற்கையையும் ,விவசாயத்தையும் காப்பாற்றுவதில் நம்மால் முடிந்த அளவு பணியாற்ற வேண்டும் !
இன்று பலரும் மிக எளிமையான முறையில் விவசாயம் செய்து,அதன்முலம் லாபம் ஈட்டி வருகின்றனர் ! அதனை முழுமையாக அறிந்து மற்ற விவசாய் களுக்கும் அதன் உத்தியை எடுத்துசெல்ல வேண்டியது நம் போன்றவர்களின் கடமை ! விவசாயத்தை வெறும் புத்தகத்தை படித்து தெரிந்துகொள்வதோடு அல்லாமல் அங்கு சென்று நேரில் இறங்கி வேலை செய்யும் போது இன்னும் நெறைய தெரிந்துகொள்ள முடிகிறது !வாருங்கள் நண்பர்களே வரும் நாட்களில் நாம் இணைந்து பணியாற்றுவோம் !